வாழைப்பழ புத்தர்

4.வாழைப்பழ புத்தர்

புத்தர் தன் சீடர்களுடன் காட்டு வழியே நடந்து போய் கொண்டிருந்தார். காலையிலிருந்து நடந்து கொண்டுயிருந்தார்கள்.காடு நீண்டு போய்கொண்டேயிருந்தது.ஊர் வர மாதிரியே தெரியவில்லை.மதியம் கடந்தது.எல்லோருக்கும் பசி.யாரும் வாய் திறக்கவில்லை.சற்று நேரம் கடந்து இருக்கும்.ஒரு வாழைமர தோப்பை கண்டார்கள்.பெரிய பெரிய காட்டு வாழைப்பழம்.எல்லோரும் பறித்து சாப்பிட்டார்கள்.புத்தரும் சாப்பிட்டார்.புறப்படும் முன்பு புத்தர் அந்த வாழை மரங்களை கருணையுடன் பார்த்தார்.அப்போது ஒரு வாழைமரம் புத்தரை நோக்கி தாழ்ந்து வந்தது.அதனுடைய வாழைதாரில் ஒரே ஒரு சிறிய வாழைப்பழம் மட்டும் மீதி இருந்தது.அது தன்னை முழுமையா புத்தரிடம் ஒப்படைக்க விரும்பியது.புத்தர் அந்த வாழைப்பழத்தை பறித்து கொண்டார்.பயணத்தை தொடர்ந்தார்கள்.

சிறிது தூரம் நடந்து இருப்பார்கள்,ஒரு பாறையின் மேல் ஒரு மனிதன் படுத்து கொண்டு வயிற்றை பிடித்து கொண்டே கத்தி கொண்டியிருந்தான். அவன் அருகில் உள்ள ஊரை சேர்ந்த வைத்தியன். அவனுக்கு வந்த வயிற்று வலியை அவனுடைய மருத்துவத்தாலே குணப்படுத்த முடியவில்லை.வெளியே தெரிந்தால் அவமானமாக ஆகிவிடும் என்பதால் காட்டுக்குள் வந்து படுத்துவிட்டான்.காட்டில் உள்ள மூலிகைகளை எல்லாம் பறித்து முயற்சித்து பார்த்தான்,ஒன்றும் பலிக்கவில்லை.புத்தரை பார்த்ததும் கும்பிட்டு தன்னை குணம்படுத்தும்படி கேட்டு கொண்டான்.புத்தர் அவன் வயிற்றில் அந்த சிறிய வாழைப்பழத்தை வைத்து தடவி கொடுத்தார்.டக்கென வயிற்று வலி மறைந்தது.அவனுக்கு ஒரே ஆச்சரியம்.அவன் புத்தரை வணங்கி நன்றி தெரிவித்தான்.குணப்படுத்தவே முடியாத தன்னுடைய வயிற்று வலியை குணப்படுத்தியது அந்த வாழைப்பழம்தான் என்று அவன் நம்பினான்.சக்தி வாய்ந்த அந்த வாழைப்பழம் கிடைத்தால் அதை வைத்துகொண்டு எல்லோரையும் குணப்படுத்தி நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசை அவனுக்குள் எழுந்தது.அந்த வாழைப்பழத்தை எப்படியாவது எடுத்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் புத்தரை பின் தொடர்ந்து செல்ல ஆரம்பித்தான்.புத்தர் நடந்து கொண்டே இருந்தார்.நீண்ட நேரம் நடந்த பிறகு சிறிது ஓய்வு எடுக்க படுத்தார்.அந்த நேரத்தில் வைத்தியன் யாருக்கும் தெரியாமல் வாழைப்பழத்தை திருடிகொண்டு, ஊருக்கு சென்று விட்டான்.

ஊருக்கு சென்ற பிறகு மருத்துவ தொழிலை பார்க்க ஆரம்பித்தான். தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு எல்லாம் வாழைப்பழ சிகிச்சை கொடுத்தான்.என்னவோ தெரியவில்லை அது வேலை செய்யவே இல்லை.அவனுக்கு அதிர்ச்சியா இருந்தது.ஏன் வாழைப்பழ மருத்துவம் வேலை செய்யவில்லை என அவனுக்கு புரியவே இல்லை.ஆனால் அந்த வாழைப்பழம் மட்டும் ஒரு மகிமையான வாழைப்பழம் என்று அவனுக்கு தெரிந்தது.எடுத்துட்டு வந்த நாளிலிருந்தே அது அப்படியேதான் இருந்தது, கொஞ்சம் கூட வீணாக போகவில்லை.அவன் அதை பத்திரபடுத்தி வைத்தான்.நாள்கள் கடந்தன,ஒரு நாள் புத்தர் அந்த ஊர் வழியே வந்தார்.அவரை பார்க்க ஊர் மக்கள் எல்லாம் திரண்டார்கள்.வைத்தியனும் சென்றான்.புத்தர் மக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கொண்டிருந்தார்.அப்போது உடல் முழுவதும் புண்களால் நிரம்பி இருந்த ஒருவன் வந்து,தன்னுடைய நோயை குணப்படுத்த சொல்லி புத்தரிடம் மன்றாடினான்.புத்தர் தன்னுடைய பார்வையை கூட்டத்தில் நின்று கொண்டிருந்த வைத்தியனை நோக்கி திருப்பினார்.அந்த பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்ட வைத்தியன் தான் பத்திரபடுத்தி வைத்து இருந்த வாழைப்பழத்தை கொண்டு வந்து புத்தரிடம் ஒப்படைத்தான்.புத்தர் அந்த வாழைப்பழத்தால் புண் இருந்தவனின் உடல் முழுவதும் தடவி கொடுத்தார்.அந்த புண்கள் எல்லாம் மறைய ஆரம்பித்தது.வைத்தியனுக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை.

ஊர் மக்கள் எல்லாம் போன பிறகு தனியாக புத்தரிடம் சென்ற வைத்தியன் தனக்கு அந்த வாழைப்பழ வைத்தியத்தை சொல்லி கொடுக்குமாறு கேட்டான்.புத்தர் அவனை சற்று ஆழ்ந்து பார்த்தார்.பிறகு அதை உடனே கற்றுகொள்ளுவது சிரமம் என்றும்.தன்னுடன் ஒரு வருட காலம் இருந்தால் மட்டுமே வாழைப்பழ மருத்துவத்தை கற்று கொள்ள முடியும் என்று கூறினார்.அதை ஏற்று கொண்ட வைத்தியன் புத்தருடனே கிளம்பினான். புத்தர் ஊர் ஊராக பயணம் மேற்கொண்டார்.காடு மேடு என்று புத்தர் எங்கு போனாலும் வைத்தியனும் அவருடனே இருந்தான்.புத்த துறவிகள் சாப்பிடுவதை போலவே அவனும் பிச்சை எடுத்தே சாப்பிட்டான்.ஒரு வருட காலம் கடந்தது.புத்தர் அவனை அழைத்தார்.ஏதாவது கேட்க விரும்புகிறாயா என்று கேட்டார்.அவன் எதுவும் இல்லை என்றான்.புத்தர் அவனிடம் அந்த வாழைப்பழத்தை கொடுத்தார்.அதை வாங்கி கொண்டு அமர்ந்தான்.அடுத்து வந்த பௌர்ணமி அன்று அவன் புத்தரிடம் சந்நியாசம் பெற்று புத்த துறவி ஆனான்.

வருடங்கள் ஓடின, இப்போதெல்லாம் அவன் அதிகம் பேசுவதே இல்லை. பெரும்பாலான நேரங்களில் அவன் அந்த வாழைப்பழத்தையே பார்த்து கொண்டு இருந்தான்.யாராவது கூப்பிட்டால் கூட அவனுக்கு அது கேட்பதில்லை.பலமுறை கூப்பிட வேண்டி இருந்தது.

ஒரு நாள் புத்தர் அவனை அழைத்து தொலைதூரத்தில் உள்ள ஊரை குறிப்பிட்டு அங்கே போகுமாறு சொன்னார்.அவன் புறப்பட்டான்.அந்த ஊரை சென்றடைய 12 நாள்கள் நடந்தான். அந்த ஊரை அடைந்த பிறகு, ஊரின் ஆற்றங்கரையோரம் உள்ள அரச மரத்தின் அடியில் போய் அமர்ந்து கொண்டான்.எங்கிருந்தோ வந்த ஒரு புத்த துறவி யாரிடமும் பேசாமல் அரச மரத்தின் அடியில் உட்கார்ந்து வாழைப்பழத்தையே பார்த்து கொண்டு இருக்கும் செய்தி ஊர் முழுவதும் பரவியது.ஊர் மக்கள் அவனை பார்க்க வந்தார்கள். அவனிடம் பேசி பார்த்தார்கள்,அவன் மௌனமாகவே இருந்தான்.ஊர் மக்களுக்கு அவனை பிடித்து விட்டது.அவனை வாழைப்பழ புத்தர் என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.அவனுக்கு தினமும் சாப்பாடு கொண்டு வந்து அவன் பக்கத்தில் வைத்துவிட்டு சென்றார்கள்.அவனுக்கு பசி எடுக்கும் போது அந்த உணவை எடுத்து சாப்பிடுவான். குளித்து ரொம்ப நாளா ஆயிடுச்சு என்று யாராவது நினைவூட்டினால்தான் குளிப்பான். மாதங்கள் கடந்தது.

ஒரு நாள் புத்தர் இறந்து விட்டார் என்ற தகவல் அந்த ஊரை வந்தடைந்தது.புத்த பகவான் இறந்த செய்தியை கேட்டு ஊர் மக்கள் சோகத்தில் விழுந்தார்கள்.அந்த செய்தியை வாழைப்பழ புத்தரிடம் கொண்டு போனார்கள்.அப்போது அவன் சாப்பிட்டு கொண்டு இருந்தான்.புத்தர் இறந்தவிட்டார் என்ற செய்தியை கேட்டு அவன் கொஞ்சம் கூட கவலைப்படவில்லை. சாப்பிடுவதிலே கவனம் செலுத்தினான்.வழக்கம் போல் சாப்பாட்டை ரசித்து ருசித்து சாப்பிட்டு கொண்டு இருந்தான். அவனுடைய செய்கை ஊர் மக்களுக்கு அதிர்ச்சியா இருந்தது.ஒரு புத்த துறவி புத்தர் இறந்த செய்தி கேட்டு கொஞ்சம் கூட வருத்தப்படவில்லையே என்று அவன் மேல் கோபம் கொண்டார்கள். அவனுக்கு சாப்பாடு கொடுப்பதை நிறுத்தினார்கள். அவனிடம் போவதையும் நிறுத்தினார்கள்.நாளடைவில் அவனை மறந்தும் விட்டார்கள்.

ஒரு நாள் ஊரில் ஒருவனுக்கு கண்பார்வை பறி போனது.அது தொடர ஆரம்பித்தது.ஊர் மக்கள் ஒவ்வொருத்தராக கண்பார்வையை இழந்து கொண்டே வந்தார்கள்.உள்ளுர் வைத்தியர் மட்டுமல்லாமல் வெளியூரிலிருந்தும் வைத்தியரை வரவழைத்து பார்த்தார்கள்.எந்த வைத்தியமும் பலனளிக்கவில்லை.ஊரில் முக்கால்வாசி பேர் பார்வையை பறி கொடுத்தார்கள்.மக்கள் எல்லாம் அஞ்சி நடுங்கினார்கள்.ஊர் மக்கள் எல்லோரும் ஒன்று கூடி புத்தர் சிலையின் முன் நின்று பிரார்த்தனை செய்தார்கள். தங்கள் பிரச்சனையை தீர்க்கக்கூடிய ஒருவரை தங்களுக்கு அடையாளம் காட்டுமாறு வேண்டினார்கள்.ஒரு வார காலம் பிரார்த்தனை நீடித்தது.கடைசி நாள்,பிரார்த்தனையின் முடிவில் வானத்திலிருந்து பெரிய பருந்து ஒன்று கீழே இறங்கி வந்து புத்தர் சிலையின் மேல் அமர்ந்தது. மக்கள் எல்லாம் ஆச்சரியமா அதை பார்த்து கொண்டிருந்தார்கள்.அது தன்னுடைய கால்களால் புத்தர் கழுத்தில் போட்டிருந்த மாலையை பற்றி கொண்டு வானத்தில் பறந்தது.எல்லோரும் அதை பின்தொடர்ந்து ஓடினார்கள்.அது மேலே வானத்தை நோக்கி பறந்து,புத்தர் சிலை இருக்கும் இடத்திற்கு மேலே சில முறை வட்டம் அடித்து,பிறகு கிழக்கு நோக்கி பறந்து அந்த மாலையை கொண்டு போய் வாழைப்பழ புத்தரின் கழுத்தில் போட்டுவிட்டு மறைந்தது.

ஊர் மக்கள் எல்லோரும் வாழைப்பழ புத்தரின் முன்னால் கூடி நின்றார்கள். அவரை புரிந்து கொள்ள முடியாத தங்களின் அறியாமையை எண்ணி வருந்தினார்கள்.அவரிடம் மன்னிப்பு கோரினார்கள்.ஊர் மக்களுக்கு வந்துள்ள பிரச்சனையை பற்றி கூறி அந்த நோயிலிருந்து விடுபட தங்களுக்கு உதவி செய்யுமாறு வேண்டிகொண்டார்கள்.வாழைப்பழ புத்தர் நிமிர்ந்து கூட்டத்தை பார்த்தார்.வாழைப்பழம் வைத்திருந்த தன்னுடைய வலது கையை உயர்த்தி பிடித்தவாறே தன் அருகில் வருமாறு சைகை செய்தார். மக்கள் வரிசையா அவர் அருகில் போனார்கள். தன் கையில் வைத்திருந்த வாழைப்பழத்தை வைத்து ஒவ்வொருத்தர் கண்களிலும் அழுத்தி அழுத்தி எடுத்தார். எல்லோரும் ஆச்சரியம்படும் விதமா சிறிது நேரத்திலே அனைவருக்கும் இழந்த பார்வை திரும்ப வந்தது.பார்வை திரும்ப கிடைத்த சந்தோசத்தை மக்கள் ஆடி பாடி கொண்டாடி மகிழ்ந்தார்கள். வாழைப்பழ புத்தரை புத்தரின் வடிவமாகவே பார்த்தார்கள்.தங்களுடைய நன்றியை வெளிப்படுத்தும் விதமாக அவரை புத்தராகவே நினைத்து படையல் போட்டார்கள்.அவரை சுற்றி சுற்றி வந்து ஆடி பாடினார்கள். தங்களுடைய தலையை அவரின் கால் பாதங்களில் வைத்து ஒற்றி எடுத்தார்கள். இறுதியாக தங்களுடைய வாழ்க்கையில் தாங்கள் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்திப்பதாகவும், தங்களை நிரந்தரமா இந்த துன்பங்களிலிருந்து விடுவிக்க ஒரு வழியை காட்டுமாறு கேட்டார்கள். வாழைப்பழ புத்தர் முதன்முறையாக வாய் திறந்தார். அதிலிருந்து வார்த்தைகள் உதிர்ந்தன.

புத்தம் சரணம் கச்சாமி

அவரிடம் இருந்த வெளிப்பட்ட அந்த ஒலி,காந்தம் போல் அனைவரையும் ஈர்த்தது.எல்லோரும் திரும்ப திரும்ப அதையே உச்சரித்தார்கள்.ஒலி அலைகள் பரவின.ஊர் முழுவதும் அந்த ஒலியால் நிரம்பியது.அப்படியே அது பரவி தொலைதூரமெல்லாம் கேட்க ஆரம்பித்தது.அப்போது தொலைவில் அரசன் ஒருவன் குதிரையில் பயணம் செய்து கொண்டிருந்தான்.ஒலி சத்தத்தை கேட்டு வியப்படைந்து,சத்தம் வந்த திசையை நோக்கி குதிரையை திருப்பினான்.அவன் அந்த ஊரை அடைந்த போது ஊரே வெறிச்சோடி காணப்பட்டது.மக்கள் யாரையும் காணவில்லை. காக்கா,குருவியை கூட பார்க்க முடியவில்லை.சத்தம் வந்த அரசமரத்தடியை நோக்கி போனான்.அங்கேயும் யாரையும் காணவில்லை. சத்தம் மட்டும் தீவிரமா ஒலித்து கொண்டிருந்தது.அந்த அரச மரத்தை சுற்றி ஒலி அலைகள் நிரம்பி வழிந்தன.கடல் அலைகள் மாதிரி ஒலி அலைகள் ஆர்ப்பரித்து கொண்டிருந்தன.அரசன் அந்த ஒலியில் தன்னை இழந்தான். அவன் உதடுகள் அந்த மந்திர ஒலியை தானாகவே உச்சரித்தன.அந்த மாபெரும் ஒலி அலையில் அப்படியே கரைந்து மறைந்து போனான்.

புத்தம் சரணம் கச்சாமி


24-7-2017
சதிஷ்

Comments